சனி, 14 செப்டம்பர், 2013

மின்சாரம் நின்றுவிட்டால் நான் என்ன செய்வது?

சில வேளைகளில் பாரிய ஒரு புயல்காற்று அல்லது விபத்து ஒன்றினால் மின்சாரம் பாயும் கம்பிகள் சேதமடையும் பொழுதுமின்சக்தி நின்று விடும். மின்சாரத்தை வழங்கும் நிறுவனம் திருத்த வேலைகளைச் செய்வதற்காக மின்வழங்குவதை நிறுத்தி விடும் சந்தர்ப்பத்திலும்பரவலான மின்துண்டிப்பு ஏற்படலாம். மின்சாரத்தை வழங்கும் வியாபார நிறுவனம் முடிந்த அளவு விரைவாக மின்சாரம் மீண்டும் வழங்குவதற்கு எப்பொழுதும் முயற்சி செய்யும். இருந்தபோதிலும், மின்சக்தி திரும்புவதற்குச் சில மணித்தியாலங்கள் அல்லது சில நாட்கள் கூட எடுக்கலாம். இப்படியாக மின்சாரம் தடைப்படும் பொழுது நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்து வைத்திருப்பது அவசியம் ஆகும் .

முதலாவதாக நான் செய்ய வேண்டியது என்ன?

 பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பரவலான மின்துண்டிப்பு ஒரு அவசரகால நிகழ்வாக இருப்பதில்லை. மின்சாரம் நின்று விட்டால் உபயோகிப்பதற்கென மெழுகுவர்த்திகளை எப்பொழுதும் உங்கள் வீட்டில் வைத்திருங்கள். உங்கள் வீட்டில் மட்டுமா மின்சாரம் நின்று விட்டது, அல்லது உங்கள் அயலவர்களும் மின்சாரத்தை இழந்து விட்டார்களா என்பதை கண்டறியுங்கள். மின்சாரம் உங்கள் வீட்டில் மட்டும் தான் நின்றிருந்தால் நீங்கள்மின்னுருக்கி (fuse) ஒன்றினைச் செயலிழக்கச் செய்து இருப்பீர்கள். செயலிழந்த மின்னுருக்கியுடன் தொடுக்கப்பட்டு உள்ள மின்னுபகரணங்கள் அல்லது கருவிகளை நிறுத்தி விடுங்கள்.

 எப்படிச் செய்வது என்று நீங்கள் அறிந்து இருந்தால்மின்னுருக்கிப் பெட்டியினை அணுகி செயலிழந்த மின்னுருக்கியினைச் சோதித்துப் பார்த்து கண்டுபிடித்து அதனை மீளவும் செயல்படச் செய்யுங்கள் அல்லது செயலிழந்த மின்னுருக்கிகை மாற்றிப் புதிதாக ஒன்றைப் போடுங்கள். இதனை எவ்வாறு செய்வது என்று உங்களுக்கு நிச்சயமாகத் தெரியாது போனால், அல்லது மின்னுருக்கி மீண்டும் செயலிழந்து போகிறது என்றால், துறைசார் நிபுணரான மின்னியலாளர் (electrician) ஒருவரை நீங்கள் உதவிக்கு அழைத்தல் வேண்டும்.
உங்கள் அயலவர்களும் மின்சாரத்தை இழந்து இருந்தால் பின்வரும் படிமுறைகளைப் பின்பற்றுங்கள்:

உங்கள் உள்ளூர் மின்சக்தி வழங்கும் நிறுவனத்தை தொலைபேசியில் அழையுங்கள். 
பெரிதான மின்னுபகரணங்களின் விசையை நிறுத்தி அவற்றை கொழுவு முனைகளில் இருந்து கழற்றி விடுங்கள் . ஆனாலும் மின்சாரம் திரும்பியதும் அதனை நீங்கள் அறிந்து கொள்வதற்காக ஒரு விளக்கினை மட்டும் எரிய விடுங்கள்
தகவல் அறிவதற்காக மின்கலவடுக்கு (battery) மூலம் இயங்குகின்ற அல்லது கையால் சுழற்றி இயக்குகின்ற ஒரு வானொலியினைப் போட்டு வைத்துக் கொள்ளுங்கள்.
சில சமயங்களில், பரவலான மின் துண்டிப்பின் விளைவாகத் தண்ணீர் ஓடுவது நின்று விடுகிறது . உங்கள் வீட்டில் குழாயில் தண்ணீர் ஓடவில்லை என்றால், அதே சமயம் உங்கள் மலசல கூடத்தைத் தொடர்ந்து பயன் படுத்த வேண்டியிருந்தால் வேறொரு நீர் மூலத்தில் இருந்து நீரினைப் பெற்று உங்கள் குளியல் தொட்டியினை நிரப்புங்கள்: உதாரணம் பனிக்கட்டி அல்லது நீரோடை ஒன்றில் இருந்து கிடைக்கும் நீர். நீங்கள் மலசல கூடத்தை உபயோகித்து முடிந்த பின்னர் தாங்கியில் ஒரு வாளி தண்ணீரை ஊற்றி நீரினை அடித்துச் செலுத்திவிடுங்கள்

பனிக்காலத்தில் நான் என்னசெய்வது?

பருவகாலம் பனிக்காலமாக இருந்தால்:
· வெப்பத்தினை வீட்டினுள் தக்க வைத்துக் கொள்வதற்காக கதவுகளையும் ஜன்னல்களையும் மூடி விடுங்கள்.
·         தடித்த ஆடைகளை உடலில் அணியுங்கள்.
பனிக்காலத்தின் பொழுது உங்கள் நீர்க்குழாய்கள் உறைந்து போய் வெடிக்கக் கூடிய ஆபத்து இருக்கிறது. இதனைத் தடுப்பதற்காக நீங்கள் செய்ய வேண்டியன:
·      குடிப்பதற்கும் கழுவிச் சுத்திகரிப்பதற்கும் என்று கொள்கலன்களில் சிறிதளவு தண்ணீரை சேகரித்துக் கொள்ளுங்கள்.
·         வீட்டினுள் வரும் பிரதான குழாயினை அடைத்து நீரினை நிறுத்தி விடுங்கள்.
·            உங்கள் நீர்க்குழாய் வாய்கள் யாவற்றையும் திறந்து தண்ணீரை வெளியே ஓடவிட்டு, தண்ணீர்க் குழாய்களைப் பூரணமாக வடியவிடுங்கள்.
·      வெப்பநீர் சூடாக்கும் தொகுதியின் விசையை நிறுத்தி, அதற்குரிய வால்வுகளைத் திறந்து விட்டு, வெப்பநீர்க் குழாய்களை பூரணமாக வடிய விடுங்கள்.
·         நீர்க்குழாய் வேலையின் பொழுது பயன்படும் உறைதல் எதிரி /அன்ரிபிறீஸ் (antifreeze) திரவத்தினை, அல்லது பொழுது போக்கு வாகனங்களுக்கான பனிக்கால மாற்றக் கரைசலினை, மலசலக் கூடத்துத் தொட்டிக்குள்ளும் உங்கள் வீட்டில் நீர் ஓடாமல் தேங்கி நிற்கும் வேறு இடங்களிலும் கலந்து விடுங்கள். (உங்கள் வீட்டில் செப்ரிக் தாங்கி / septic tank ஒன்று இருக்குமானால் அன்ரிபிறீஸ் அதனைச் சேதப்படுத்தலாம். உங்கள் நீர்க்குழாய் வேலைப் பொருத்தல் பகுதிகள் மற்றும் நீர்க் குழாய்கள் என்பவற்றில் உள்ள "அன்ரிபிறீஸ்" முழுவதையும் வெளியே அடித்து எடுத்த பின்பே அவற்றை நீரினால் நிரப்பி விடவும். அன்ரிபிறீஸ் அடங்கியுள்ள தண்ணீரைக் குடிக்க வேண்டாம்).
உங்களுடைய நீர்க்குழாய்கள் உறைந்து விட்டன என்றால் அவற்றை சூடாக்குவதற்கு நீங்களே முயலவேண்டாம். தேர்ச்சி பெற்ற நீர்க்குழாய் வேலையாளர் ஒருவருடன் அதுபற்றித் தொடர்பு கொள்ளுங்கள்.

மின்சாரம் திரும்பவும் வருவதற்கு காத்திருக்கும் வேளையில் நான் என்ன செய்வது?

·         குளிரூட்டியையோ அல்லது உறைநிலைப் பெட்டியையோ அவசியம் இல்லை என்றால் திறக்க வேண்டாம். உணவுகள் கூடிய நேரத்துக்குக் குளிராக இருப்பதற்கு இது உதவுகிறது.
·         உங்கள் அவசரகால உபயோகப் பெட்டியினை வெளியில் எடுத்து அதில் இருந்து உங்களுக்குத் தேவையான உபயோகப் பொருட்களை எடுத்துப் பயன்படுத்துங்கள்.
·         மின்கலவடுக்கு மூலம் இயங்குகின்ற அல்லது கையால் சுழற்றி இயக்குகின்ற வானொலி ஒன்றில் மிகச் சமீபத்திய செய்திகளைக் கேளுங்கள்.
·         உங்களுடைய நிலக்கீழ் தளத்தில் வெள்ளமாக நீர் தேங்க ஆரம்பித்தால் தளபாடங்கள் யாவற்றையும் உயர்ந்த ஒரு இடத்துக்கு நகர்த்துங்கள். மின்சாரத் தொடர்பினைத் துண்டித்து விடுங்கள். மின்சாரம் மீண்டும் வரும் பொழுது சேதங்கள் ஏற்படுவதை இது தடுக்கிறது .
அது ஒரு பனிக்காலம் என்றால்:
·         வெப்பத்தைத் தரும் வேறொரு மூலம் (உம்: குளிர்காயும் சுவாலைப் பகுதி/ fireplace, மின்னுற்பத்தி இயந்திரம்/generator) அமைந்துள்ள ஓர் அறையில் இருந்து கொள்ளுங்கள். வெப்பநிலையை தணித்து ஆனால் குளிரைத் தாங்கக் கூடிய அளவில் வைத்துக் கொள்ளுங்கள். வெப்பமளிக்கும் ஆடைகளை அணியுங்கள்.

மின்சாரம் திரும்பவும் வரும்பொழுது நான் என்ன செய்ய வேண்டும்?

·         அவசரகாலத் தேவைக்கென்று வெப்பம் வழங்கிய உபகரணத்தை நிறுத்தி விடுங்கள்.
·         மின் துண்டிப்பு 4 மணி நேரத்திலும் குறைவாக இருந்தால் மிகவும் தேவைப்படும் மின்னுபகரணங்களை முதலில் இணைத்து விடுங்கள். 10 முதல் 15 நிமிடங்கள் தாமதித்து மற்றைய உபகரணங்களை இணைத்து விடுங்கள்.
·         குளிரூட்டி மற்றும் உறைநிலைப் பெட்டி ஆகியவற்றில் உள்ள உணவுகளின் நிலைமையை பரிசோதியுங்கள். உங்களுடைய குளிரூட்டி/ உறைநிலைப் பெட்டி பல மணித்தியாலங்கள் இயங்காது இருந்தது என்றால் உள்ளே இருக்கும் உணவு இனி உண்பதற்குத் தகுதியற்றதாகப் போகலாம். உங்கள் குளிரூட்டி அல்லது உறைநிலைப் பெட்டியில் இருந்து எந்தெந்த உணவுகள் வீசப்பட வேண்டும் என்று அறிவதற்கு உதவியாக ஆரோக்கியம் மற்றும் நீண்டகாலப் பராமரிப்புக்கான ஒன்ராறியோ அமைச்சு (Ontario Ministry of Health and Long-Term Care) (1) உணவுப் பாதுகாப்பு வழிகாட்டிகளை வெளியிட்டு உள்ளது
·         உங்களுடைய மணிக் கூடுகள், சுயமாக இயங்கும் நேரக் கண்காணிப்புக் கருவிகள் மற்றும் அபாய அறிவிப்புக் கருவிகள் போன்றவற்றை மீண்டும் சரிநிலைக்கு மாற்றம் செய்து வையுங்கள்.
அது ஒரு பனிக்காலம் என்றால்:
·         நீரினைச் சூடாக்கும் தாங்கியின் விசையை ஆரம்பித்து வைக்க முன்பாக தாங்கியைப் பூரணமாக நிரம்பும்படி அனுமதியுங்கள்.
·         சாதாரணமாக விடுவதை விடச் சற்று உயர்வான ஒரு வெப்ப நிலையில், சில மணித்தியாலங்கள் உங்கள் வீட்டுக்கு வெப்பம் அளியுங்கள். வீடு உலர்வு அடைவதற்கு இது உதவுகிறது..
·         மின்சாரத் தொடர்பு துண்டிக்கப்பட்டு உள்ளது என்பதை நீங்கள் நிச்சயப் படுத்தாமல் வெள்ளம் நிற்கும் நிலக்கீழ் தளத்துக்குள் புக வேண்டாம்

கருத்துகள் இல்லை: